Saturday, August 26, 2017

வண்டித் தடம் - பாகம் 4





பாகம் 4 - முத்துசாமி

புலிமணியின் தாயாருக்கு ஐந்தும் ஆண்மக்கள். ஒவ்வொருவருக்கும் முறையே ஐந்தாறு வயது வித்தியாசம் என்பதால் குடும்பத்தில் மூத்த சகோதரருக்கும்,  கடைக்குட்டியான புலிமணிக்கும் ஏறத்தாழ இருபத்தைந்து வித்தியாசம்.  ஐவரில் புலிமணி மட்டுமே உள்ளூர் பள்ளியில் ஒழுங்காக படித்து கல்லிடைக்குறிச்சி திலகர் வித்தியாலயத்தில் உயர்நிலைக்கல்வியும், பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் அந்த கால பி.யூ.சியும் முடித்தவர். மூத்தவர் நால்வரும் தொடக்கக்கல்வி கூட முடிக்காமல் விவசாயவேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

புலிப்பட்டி மலையடிவார ஊர் என்பதால் பண்டையகாலம் முதலே காட்டுக்குள் வேட்டைக்குச் சென்று மான், மிளா, உடும்பு, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களை வேட்டையாடி, உணவிற்காக சமைத்தவை போக மீதியாகும் கறியை மழைக்கால உபயோகத்திற்காகவும், வெளியூரில் இருந்து வரும் உறவினர்களுக்கு கொடுப்பதற்காகவும் கொடிக்கறியாக உப்புக்கண்டம்  போட்டு  வைத்திருந்து பயன்படுத்தும் பழக்கம் ஊர் முழுதுமே இருந்ததுஉடன்பிறந்தவர்கள் எல்லாம் ஒரு அண்டா கறி தின்பவர்களாக இருந்தும், புலிமணி மட்டும் ஒரு துண்டு கறி கூட தின்னாமல், வள்ளலார் வழியில் தூய சைவராக வளர்ந்தார்.

புலிமணி பிறந்த மறுவருடமே அவரது மூத்த சகோதரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அடுத்தடுத்த சகோதரர்களுக்கும் வரிசையாக திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர்.  புலிமணியின் தாயாரானவர்  பெண் வாரிசு இல்லாத காரணத்தாலும், பேச்சுத்துணைக்காகவும்  முத்துசாமியின் அக்காவை தன் மகளாகவே வளர்த்து வந்தார். புலிமணியை  விட பனிரெண்டு வயது இளையவரான புலிமணியின் தாய்மாமன் மகனான  முத்துசாமியும், அவருக்கு ஏழெட்டு வயது மூத்த அவரது அக்காவோடு சிறுவயது முதலே புலிமணியின் வீட்டில் வளர்ந்து வந்தார். தொடக்ககல்வியை உள்ளூரிலே முடித்த முத்துசாமி, மேல்நிலைப்பள்ளி சென்று படித்தது எல்லாம் புலிமணியுடன் சைக்கிளில் சென்றே.

புலிமணி சிறுபிராயம் முதற்கொண்டே தனித்துவமான குணம் கொண்டவர். யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டார். வீட்டிலிருந்து பள்ளி, பள்ளி விட்டால் வீட்டிற்கு வந்து பாடம் படிப்பது என்ற வழக்கத்தை கல்லூரி முடிக்கும் வரை கடைப்பிடித்தவர். கல்லூரி முடித்ததும் ஊரில் சும்மா இருக்காமல் சென்னை சென்று தானாகவே வேலை தேடி பணியிலும் சேர்ந்து விட்டார். அவரை ஒப்பிட்டுப் பேசியே புலிப்பட்டி ஊர்மக்கள் தங்கள் பிள்ளைகளை திட்டி வளர்த்து வந்தார்கள். அதிலும் முத்துசாமி புலிமணியின் வீட்டிலே வளர்ந்தவர் என்பதாலும், அவருடனே சென்று படித்தவர் என்பதாலும் வீட்டார் மட்டுமல்லாமல் உற்றார், உறவினர், ஊர்மக்கள் என அனைவரும் முத்துசாமி சேட்டைகள், குறும்புகள் என்ன செய்தாலும், “ பூவோடு சேர்ந்து இருந்தாலும் நார் குணம் மாறுமா ” என்றும், “ நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்கித்தானே திங்கும் என்று கூடிக்கூடிப் பேசி குமுறிவிடுவார்கள். இதனால் சின்னவயதில் இருந்தே முத்துசாமி மனதில் புலிமணி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகி விட்டது.

புலிமணி சென்னை சென்றது முதல் முத்துசாமியின் பெற்றோரும், மற்றோரும், “  நீயும் ஒழுங்காகப் படித்தால்தான் சென்னை செல்லமுடியும்என்று கூறிபடி, படிஎன பாடாய் படுத்தியதும் முத்துசாமியின் மனக்கடுப்பிற்கு ஒரு காரணம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பிற்காக முறைப்பெண்ணான முத்துசாமியின் அக்காவை  புலிமணிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என பெரியவர்கள் பேசியபோது, “ ஒரே வீட்டில் ஒருதாய் மக்களாக உடன்வளர்ந்த சகோதரிக்கு ஒப்பான பெண்ணை மணந்து கொள்ளமுடியாது என்று புலிமணி மறுத்து விட்ட்தும் முத்துசாமி மனதில் மாறாத கோபமாகி தீராத வடுவானாதால் புலிமணியுடன் பேசுவதையும், அவர் வீட்டிற்கு வருவதையும் அடியோடு நிறுத்திவிட்டார்.

புலிமணி முத்துசாமியை சிறுவயது முதலே அறிந்தவர் என்பதாலும், ஊருக்கும் அடிக்கடி வருபவர் இல்லை என்பதாலும் எதையும் கண்டுகொள்வதில்லை.  முத்துசாமியின் அக்காவை புலிமணியின் சித்திவழி அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.அசலில் திருமணம் முடித்த புலிமணிக்கு இரண்டும் ஆண்மக்கள். முத்துசாமி உயர்நிலைக்கல்வி தேர்வு ஆகாமல் போனதால் அம்பாசமுத்திரம் அரசு சேமிப்புக்கிட்டங்கியில் ஒப்பந்தப்பணிக்குச் சென்று அப்படியே ஆளைப்பிடித்து ஐந்தாண்டுக்குள் நிரந்தரப்பணி நியமனமும் வாங்கிவிட்டார். ஒரே மகன் என்பதால் உள்ளூரிலே சொந்தத்தில் பெண்பார்த்து  இருபத்தி மூன்று வயதிற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்ட முத்துசாமிக்கு ஒரே பெண். சரி அந்தப்பெண்ணையாவது புலிமணியின் இரண்டு மகன்களின் ஒருவருக்கு பெண்கேட்பார் என்று கர்வத்தோடு எதிர்பார்த்து கவுரவம் கருதி தன்பக்கம் இருந்து ஏதும் பேசாமல் காத்திருந்த முத்துசாமிக்கு இறுதியில் ஏமாற்றமே. புலிமணி தன்னைப் போலவே இரண்டு மகன்களுக்கும் அசலிலே பெண் எடுத்துவிட்டதால் முத்துசாமியின் வன்மம் வரையறை இல்லாமல், வங்கிக்கடன் போல் கூட்டுவட்டி போட்டு கூடிவிட்டது.

 ( தொடரும் )


பாகம் 5



No comments: