Tuesday, August 25, 2015

காலை உடைத்த காஞ்சனா - பாகம் 8


முதல் ஏழு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.


பாகம் 3 - பாதியில் திரும்ப வேண்டியதுதானா பாலாப்பூரிலிருந்து….

பாகம் 4 - காணாமல் போன காஞ்சனா….









பாகம் 8 – ஹாஜியாரும், அனுமந்தையாவும்…




கவாண்டே, மணி, பாண்டே, தேசிங்கு அனைவரும் தீபாவளிக்கு ஊருக்கு சென்று இருந்தார்கள். பெரிய காந்தி, சாஜன் இரவு வேலை. விடுமுறை நாட்களில் வேலை பார்த்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்பதால் வேலைக்கு வந்திருந்த இரண்டு உள்ளூர்காரர்களை பணியில் இருக்க சொல்லி விட்டு நான், சின்ன காந்தி, செந்தில், ஜான், பாரா வந்த செக்யூரிட்டி என ஐந்து பேரும் எங்கள் துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி உள்நுழைவு வாயிலை தாண்டும் போது மேலும் இரண்டு செக்யூரிட்டிகளும் எங்களுடன் சேர்ந்து கொள்ள மொத்தம் ஏழு பேராக காட்டுக்குள் நுழைந்தோம்.

ஆள் நடமாட்டமும், முறையான பராமரிப்பும் இல்லாததால் பிரண்டைச் செடி, கோவைக் கொடி, கள்ளி, கத்தாழை, கண்டங்கத்திரி, காட்டு வெள்ளரி, தும்பை, ஊமத்தை, நாயுருவி போன்றவற்றோடு பெயர் தெரியாத செடி, கொடிகளோடு, பல விதமான காட்டு மரங்களும் அடர்ந்து வளர்ந்து இருந்த காட்டில் உள்ளே செல்ல, செல்ல மரங்கள் நெருக்கமாக இருந்தன. அங்கங்கே பெரிய, பெரிய புற்றுகளும், கிழிந்து தொங்கி கொண்டிருந்த பாம்பு சட்டைகளும், திடீரென்று குறுக்கும், நெறுக்குமாய் ஓடிய முயல்களும், கீரிகளும், மயில்களும், காட்டுக் கோழிகளும் அச்சம் தருவனாக இருந்தன.  முறையான பாதை இல்லாததால் நடக்க தோதாக கண்ணில் பட்ட வழியாகவே செல்ல வேண்டி இருந்தது. கூட்டமாக கலகலப்பாக பேசிக் கொண்டே சென்றதால் பயம் வெளிப்படாவிட்டாலும், பொழுதுபோகாத காரணத்திற்காக இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாமோ என்ற எண்ணம் மனதில் எழவே செய்தது.

நடந்து, நடந்து காட்டின் மையப்பகுதிக்கே வந்து விட்டோம். பலாப்பழ வாசனையும் இதோ, இதோ என்று எங்களை இழுத்துக் கொண்டே சென்றது. அப்போது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து கிளம்பிய சூறாவளி சுழல் காற்று குப்பை, கூளங்களை அள்ளிக் கொண்டு ஆக்ரோஷமாக சுழன்றபடி எங்களை நோக்கி வர மதில்சுவர் பக்கமாக சென்று ஒதுங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து மதில் சுவரை நோக்கி ஓடினோம். அப்போது எங்களை நோக்கி கருப்பாக இரண்டு உருவங்கள் ஓடி வர நாங்கள் அனைவரும் அஞ்சி நடுங்கி அபயக்குரல் எழுப்பினோம்.

‘கரடி, கரடி’ என ஓரிருவர் கத்த, ‘ஆகா கரடி பிடித்தால் விடாதே. அடித்தாலும், கடித்தாலும் பெரும் பிரச்சினையாயிற்றே. ஒன்றென்றால் கூட கல், கம்பு கொண்டு சமாளித்து விடலாம். ஆனால் இரண்டும் ஆறடி உயரத்தில்,ஆஜானுபாகுவாக பிரமாண்டமாக இருக்கின்றனவே, என்ன செய்யலாம்.ஏது செய்யலாம்’ என மனம் குழம்பி தவித்துக் கொண்டிருக்கும் போது அந்த இரண்டு உருவங்களும் எங்கள் அருகில் வந்து இடுப்பில் கை வைத்து இடி இடியென சிரித்தன. ’ என்னடா இது அதிசயம். கரடி மனிதக் குரலில் சிரிக்கிறதே’ என ஆச்சரியமாகப் பார்க்க முகத்தை மூடியிருந்த கம்பளி துணியை இரு உருவங்களும் விலக்க ‘அட, நம்ம அனுமந்தையாவும், ஹாஜி அப்துல்லாவும்…’ என செக்யூரிட்டிகள் மூவரும் ஒரே குரலில் கூவினர்.

ஆம். அனுமந்தையாவும், ஹாஜி அப்துல்லாவும் அங்கு நெடுங்காலமாக பணி புரியும் கிட்டத்தட்ட பணி ஓய்வுக்காலத்தை நெருங்கி விட்ட சீனியர் ஹவில்தார்கள். மதவேறுபாடு பார்க்காமல் உறவினர் போல் பழகும் நெருங்கிய நண்பர்கள். அனுமந்தையா தீவிர அனுமார் பக்தர். அதனாலே திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. ஹாஜி அப்துல்லா மகன், மகள்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்து விட்டு புனிதக்கடமையான ஹஜ் பயணத்தையும் முடித்து விட்டவர். அனுமந்தையா நெற்றியில் எப்போதும் செந்தூரம் இருக்கும். ஹாஜியாரின் நெற்றியில் தினமும் ஐந்து வேளையும் தவறாமல் பன்னெடுங்காலம் தொழுத கருந்தடம் இருக்கும். ஆனால் இருவர் மனமும் வெள்ளை. அவர்களால் யாருக்கும் இல்லை தொல்லை.

அனுமந்தையா சித்த வைத்திய பரம்பரையில் வந்தவர் என்பதால் ஓய்வு நேரங்களில் அக்கம்பக்க கிராம மக்களுக்கு இலவசமாக முறையான கை வைத்தியம் செய்து வந்தார். அப்துல்லா பள்ளிவாசலில் தினமும் மாலை வேளைகளில் குழந்தை குட்டிகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் பாத்தியா ஓதி பிணி தீர்த்து வந்தார். ‘நோய்க்கும் பார். பேய்க்கும் பார். என்னும் பழமொழிக்கேற்ப அவரவரால் சரி செய்ய முடியாது அல்லல்படும் நோயாளிகளை அவ்வப்போது அவர் இவரிடமும், இவர் அவரிடமும் அனுப்பி வைப்பர். அவர்களைப் பொறுத்த வரை அவர்களை தேடி வரும் நோயாளிகள் மருத்துவத்தாலோ அல்லது மறையின் அருளாலோ வேண்டும். அவ்வளவுதான்.

ஆச்சர்யப்படும் வகையில் ஆவேசமாக எங்களை துரத்தி வந்த சுழல் காற்று அனுமந்தையாவையும், ஹாஜியாரையும் பார்த்தவுடன் பம்மி, பதுங்கி வந்த வழியிலே திரும்பி கண்காணாமல் சென்று விட்டது. ‘என்ன இந்த நேரத்தில், இந்த கோலத்தில்…’ என்று அவர்களை விசாரிக்க நாட்டு வைத்தியத்துக்கான தேன் எடுக்க முழு உடலையும், முகத்தையும் மறைக்கும் கனத்த கம்பளியிலான பிரத்யேக அங்கி அணிந்து வந்ததாகவும் பல இடங்களிலும் எடுத்து விட்டு, மதில் சுவர் ஓரமாயிருந்த மரத்தில் தேன் எடுக்க முயலும் போது அளவில் பெரியதும், ஆக்ரோசத்தில் கூடியதுமான மலைத்தேனீக்கள் கலைந்து கொட்டத் துரத்தியதால் ஓடி வந்ததாகவும் கூறினார்கள். 

நாங்கள் வந்த காரணம் கேட்டு அறிந்த அவர்கள் எங்களை பலா மரங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டினர். நாங்களும் தூக்கிச் செல்ல முடிந்த அளவு பறித்து நாங்கள் கொண்டு சென்ற கோணிகளில் மூட்டை கட்டினோம். பின் ஹாஜியாரும், அனுமந்தையாவும் வழிகாட்ட நல்ல பாதையில் நடந்து முன்வாயிலை அடைந்தோம். விடைபெறும் போது தேனடைகளை அடுக்கி மூடி வைத்து இருந்த உறுதியான நான்கு பிளாஸ்டிக்  வாளிகளில் ஒன்றை எங்களிடம் கொடுத்து ‘நல்ல அருமையான மருத்துவக் குணம் நிறைந்த காட்டுத் தேன்.எல்லோரும் பகிர்ந்து பிரித்து உண்ணுங்கள்’ என்று கூறி வழி அனுப்பி வைத்தனர். ‘ மேன்மக்கள். மேன்மக்களே ’ என்று அவர்களை வியந்து பாராட்டிக் கொண்டே நாங்களும் டிபார்ட்மெண்ட் திரும்பினோம்.

வெளிகேட்டில் இருந்தே டிபார்ட்மெண்ட்டில் இருந்தவர்களிடம் போன் செய்து பழுத்திருக்கும் அனைத்து பழங்களையும் பேட்டரி ரூமில் இருந்து வெளியே எடுத்து நன்றாக கழுவி, வெட்டுவதற்கு தேவையான கத்தி, கட்டைகள், மற்றும் அவ்வப்போது சமையல் செய்ய வாங்கி வைத்திருந்த பெரிய பாத்திரங்கள் மட்டும் தட்டுக்களை சுத்தம் செய்து தயாராக எடுத்து வைக்கச் சொன்னோம். பின் எங்கள் துறையை அடைந்ததும், நான்கைந்து பேர் பழங்களை வெட்டி பாத்திரத்தில் போட இருவர் தேனடைகளை வெள்ளைத்துணியினால் பிழிந்து ஒரு பாத்திரத்தில் சேகரிக்க என வேலைகள் ஜரூராக நடந்தன. பின் வெட்டிய பழங்களையும், சுத்தமாக பிழிந்து எடுக்கப்பட்ட தேனையும் பெரிய பாத்திரத்தில் போட்டு கை படாமல் கரண்டி போட்டு கிளர முடிவு செய்தோம். 

எல்லா வேளையும் முடியும் நேரம் மாலை மங்கி இருட்டும் நேரம் நெருங்கி விட்டது.அன்று தீபாவளிப் பண்டிகையின் கடைசி நாளாகவும், நிறைந்த அமாவாசை தினமாகவும் இருந்ததால் இரவு வேலைக்கு வந்த நண்பர்கள் எங்கள் டிபார்ட்மெண்டின் பூஜையறையில் இருந்த துர்க்கா மாதா மற்றும் பிற தெய்வங்களின் படங்களுக்கு  பூ மாலைகள், மற்றும் அனைத்து விதமான பூஜைப் பொருள்களும் வாங்கி வந்திருந்தனர். வழக்கமாக செவ்வாய், வெள்ளி தவறாமல் பூஜை செய்வோம். அன்று விசேஷ தினம் என்பதால் சிறப்பு பூஜையாக நாங்கள் தயாரித்து வைத்திருந்த பஞ்சாமிர்தத்தையும் கடவுள்களுக்குப் படைத்து பின் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினோம்.



2 comments:

'பரிவை' சே.குமார் said...

காஞ்சனாவை நாங்களும் தொடர்கிறோம்...

துபாய் ராஜா said...

தொடர் வருகைக்கும், கருத்து ஊக்கத்திற்கும் நன்றி நண்பர் குமார்...